யாழில் 56.6 வீதமான வாக்குகள் பதிவு

வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் 56.6℅ வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினருக்கு 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிட்டனர்.
மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.