யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழை - நீரேரியின் நீர்மட்டம் அதிகரிப்பால் மக்களுக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து கொட்டிவரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கடல்நீரேரியை சூழவுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலை நீடிக்குமாக இருந்தால் தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும். எனவே, கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மண்டான் ஆகிய பகுதி மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யாழ். காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியிலிருந்து அராலி வடக்கு வரையான பகுதியில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாயும்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழுக்கை ஆறு வாய்க்காலின் நீர் மட்டம் அதிகரித்ததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், வழுக்கை ஆறு வாய்க்காலின் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடரும் அடை மழையால் 2 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 வீடுகள் முழுமையாகவும், 159 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்தன. இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
“ மழை தொடருமாக இருந்தால் தாழ் நிலப் பகுதி மக்கள் இன்னும் இடம்பெயர வேண்டிய நிலமை ஏற்படும். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும், ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த137 பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங் களைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரு ம், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 66 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 393 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 253 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேரும், பருத்தித்துறைப் பிரதேச செயலர் பிரிவில் 283 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 45 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 382 பேரும் பாதிக்கப்பட்டுள்ளளனர்- என்றார்.