நிபந்தனை விதித்து ஆசிரியைக்கு இடமாற்றம் -யாழ். மேல் நீதிமன்றால் இடைக்காலத்தடை!

ஆசிரியர் - Editor II
நிபந்தனை விதித்து ஆசிரியைக்கு இடமாற்றம் -யாழ். மேல் நீதிமன்றால் இடைக்காலத்தடை!

குடிமகன் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறுகின்ற வகையில் நிபந்தனை விதித்து ஆசிரியை ஒருவருக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை இடைநிறுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

எதிர் மனுதாரர்களான வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் ஆகியோருக்கு இந்தக் கட்டளையை உடனடியான அனுப்பிவைக்குமாறும், அவர்கள் மூவரையும் வரும் ஜனவரி 10ஆம் திகதி மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்பிவைக்குமாறும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் 2016ஆம் ஆண்டு 6ஆம் மாதம் மாணவிகள் இருவரைக் கொடுமைப்படுத்தினார் என்று ஆசிரியர் ஒரு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதனை அந்தப் பாடசாலையில் கடமையாற்றும் சங்கீத ஆசிரியை ஒருவரே முன்வைத்தார்.அதனைத் தொடர்ந்து இந்த விடயம் அதிபர், ஆசிரியர்களால் மூடிமறைக்கப்பட்டது.

எனினும் பாடசாலை மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவிகள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன், இந்த விடயத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அதிபர் மற்றும் ஆசிரியர் சிலர் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மாணவிகள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சங்கீத ஆசிரியை சாட்சியம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் சங்கீத ஆசிரியை மீது கல்வித் திணைக்களத்தால் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அதன் நிறைவில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி ஒழுக்காற்று காரணங்களின் அடிப்படையிலான இடமாற்றம் எனக் குறிப்பிட்டு சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றக் கடிதம் அனுப்பிவைத்தார்.

அந்தக் கடிதத்தில்...

முறையான ஒழுக்காற்று விசாரணை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்ற பரிந்துரைக்கு அமைவாக 01.01.2018 இலிருந்து செயற்படும் படியாக தாங்கள் கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றீர்கள்.

அத்துடன் தங்களுடைய சேவைக்காலத்தில் மீண்டும் யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையுடன் இந்த இடமாற்றம் வழங்கப்படுகின்றது என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றக் கடித்தத்துக்கு சங்கீத ஆசிரியை தனது சட்டதரணி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி ஒழுக்காற்று காரணங்களின் அடிப்படையிலான இடமாற்றம் எனக் குறிப்பிட்டு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் அனுப்பிவைக்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை இடைநிறுத்தக் கட்டளை வழங்குமாறும் ஒழுக்காற்று விசாரணையில் மனுதாரரைக் குற்றவாளியாக இனங்கண்டமையை சட்டரீதியற்ற வெற்றும் வறிதானதும் என எழுத்தாணை ஆக்குமாறும் (நீக்குமாறும்) எழுத்தாணை மனுவில் மனுதாரர் கோரினார்.

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

தங்களுடைய சேவைக்காலத்தில் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையுடன் இந்த இடமாற்றம் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளமை எதிர்காலத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனையாக முதல் தோற்றளவில் காணக்கூடியாகவுள்ளது.

இந்தப் பந்தி குடிமகன் ஒருவரின் உரிமையை மீறுகின்ற செயற்பாடாக மன்று முதல் தோற்றளவில் கருதுகின்றது. எனவே இந்த இடமாற்றக் கடிதத்தை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவு வரும் ஜனவரி 10ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும். இந்த இடைக்காலக்காலத் தடை கட்டளையையும், எதிர்மனுதாரர்களை வரும் ஜனவரி 10ஆம் திகதி மன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளையும் உடனடியாக அனுப்பிவைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு