SuperTopAds

தமிழ் மக்கள் மீண்டும் வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்கள் மீண்டும் வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. அத்தகைய முக்கியத்தும் உள்ள இந்தத் தேர்தலை வெறுமனே உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனக் குறைத்து மதிப்பிட கூடாது.

இந்தச் சபைகள் அனைத்தையும் கைப்பற்ற ஆளுங்கட்சியினர் முழு வேலையையும் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் வசம் நிதிப் பலம், ஆட் பலம், முப்படைப் பலம் என சகலதையும் பயன்படுத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்வார்கள்.

இதற்கு மேலாக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கட்சிகளுக்கு எதிராகவும் இல்லாத பொல்லாத பல பிரச்சாரங்களை அவர்கள் செய்யக் கூடும். ஆகையினால் இவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக முழு வீச்சுடன் உங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் சில சபைகளில் எங்களது வேட்புமனுக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறோம். இன்னும் சில தினங்களில் சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறான தீர்ப்பு வந்த பின்னர் சகல இடங்களிலும் நாம் எமது பிரச்சார நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இதனூடாக எங்களது சங்கு கூட்டணியைப் பலப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தவறிழைக்கக் கூடாது.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று ஒரு பகுதியினர் விரும்பி வாக்களித்தனர். அதனூடாக முகம் தெரியாத மூன்று பேரைக் கொண்டு வந்தார்கள். அவர்களை நாடாளுமன்றமும் அனுப்பி வைத்தார்கள்.

அவ்வாறு திசைகாட்டியில் வென்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை யாராவது பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை. இப்படி முகம் தெரியாதவர்களையே வாக்களித்து அனுப்பியிருக்கின்ற நிலையில் தங்களுக்கு மக்கள் ஆதரவு பலம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

அப்படியான மனோநிலையில் மக்கள் இல்லை என்பதை அவர்களுக்கு இந்தத் தேர்தலின் ஊடாகத் தெரியப்படுத்த வேண்டும். அப்படியாக இந்த அரச தரப்பினர் மீண்டும் ஒரு தடவை வெல்வார்களாக இருந்தால் தமிழ் மக்களின் இத்தனை அழிவுகள், போராட்டங்கள், தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போன சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படலாம்.

ஆகவே, அரச தரப்பில் இருந்து அல்லது சிங்கள தரப்பில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் உங்களது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

இந்த ஆளுந்தரப்பினருக்கு எதிராகவே நீங்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியதாக உள்ளது. கடந்த தேர்தல் போன்று இதிலும் தவறிழைத்தால் அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

இன்றைக்கு அதிக பலத்துடன் ஆளும் தரப்பாக ஜே.வி.பி. உள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறைத் தமிழ் மக்கள் இழைக்கக் கூடாது. ஆகையினால், இந்தச் சிங்கள தேசிய கட்சிகளை விலக்கி வைத்துவிட்டு தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

மேலும் சுயேச்சையாகவும் ஒரு எம்.பி. வந்திருக்கின்றார். அவர் யார் என்பதும் இப்போது அவர் என்ன என்ன செய்து வருகின்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில்தான் இந்த வைத்தியரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதேவேளை, இந்தத் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்றும், தேர்தல் முடிந்த பின்னர் கூட்டுக்களை அமைக்கலாம் என்றவாறாக சுமந்திரன் கூறுவார். ஆனால், சபைகளில் நாங்கள் பெரும்பான்மையை எடுக்க வேண்டும். இதனூடாக கூட்டுச் சேராமலும் ஆட்சியமைக்க முடியும். கூட்டுச் சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்கலாம் என்றில்லை.

அதேநேரத்தில் யாருடன் கூட்டு என்று பலர் கேட்கலாம். உண்மையில் மக்களின் முழுமையான ஆதரவுடன் நாங்கள் வெல்வோமாக இருந்தால் யாருடனும் கூட்டுச் சேர வேண்டிய தேவை கிடையாது.

எனவே, கடந்த தேர்தலில் இழைத்த தவறுகளை மறுபடியும் இழைக்காமல் தமிழ் மக்களின் போராட்டங்களும், தியாகங்களும் வீண்போகாத வகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.