மன்னார் வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முயற்சி - தனியொருவராக எதிர்த்து நிற்கும் ரவிகரன் எம்.பி

மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை மற்றும், இவற்றால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமையைக் கருத்திற்கொண்டு வடமாகாணசுகாதார அமைச்சின்கீழ் காணப்படும் குறித்த மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்தியஅரசின் கீழ் கொண்டுவருவதற்கு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வடமாகாணசபையின் கீழ் காணப்படும் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை, மத்திய அரசிற்கு மீளக்கையளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக அற்பசொற்ப அதிகாரங்களே மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அரசு அவ்வாறு மகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அந்த அற்பசொற்ப அதிகாரங்களையும் மீளப்பெறும் முனைப்புடன் செயற்பட்டுவருவதையும் இதன் போது குறிப்பிட்டார்.
மாவட்ட பொது வைத்தியசாலைகள் கடந்த காலங்களில் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டமை மற்றும், பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டு அதன்மூலம் பல பாடசாலைகள் மத்திய அரசின் கீழ்கொண்டுவரப்பட்டுள்ள நிலமைகளையும் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் இவ்வாறு மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையினையும் மத்திய அரசிற்கு மீளக்கையளிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது, மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் முனைப்புடன் செயற்படும் மத்திய அரசின் நிகழ்சிநிரலை இலகுபடுத்துவதாக அமையுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துமாறு கோருவதைவிடுத்து, இவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திக்கு மீளக்கையளிக்கும் வகையிலான தீர்மானங்களை நிறைவேற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் தெரிவித்தார்.
எனவே குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலணைசெய்யுமாறு தனி ஒருவராக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.