சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது!

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறிய சிவஞானம் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது கடந்த காலங்களைப் போல் அல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது. இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதேவேளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தமிழ் அரசியல் புலம் சார்ந்த கட்சிகள் கைப்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்த நிலையில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், கொள்கைகள், பாதைகள் வேறு வேறாக இருந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு ஒன்றிணைவது அவசியமாகும்.
இதில் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து போராளிக் கட்சிகளும் அடங்குவதாக இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பான கருத்தாடல்கள் கட்சிகளின் தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை தற்போது அனைவரும் ஒரு புதுத் தளத்துக்கு வருவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது நிறைவுற்ற பின்னரே தேர்தலில் தற்போதைய களச் சூழலுக்கேற்ப எவ்வாறு ஒரே நிலைப்பாட்டுடன் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க முடியும்.
அது மட்டுமன்றி கூட்டாக போட்டியிடுவதா, இரண்டு அல்லது மூன்று தரப்பாக வாக்குகள் சிதறாத வண்ணம் போட்டியிடுவதா என்பது பற்றியும் அடைவை எட்ட முடியும்.
அத்துடன் தமிழ் தரப்பின் போட்டியாளர்கள், எந்தவொரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் சேறுபூசல்களில் ஈடுபடாமல், ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கிய வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.
அந்த வகையில் அவரவர் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு, களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும் என தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியுள்ள நிலையில், கட்சியின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுமா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அவ்வாறான எதுவும் இனி இடம்பெற வாய்ப்பிருக்காது என்றும் சிறீதரனை கூட கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.