ஊதியம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்!

ஆசிரியர் - Admin
ஊதியம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்!

இந்திய மாநிலம், குஜராத்தில் சம்பள பாக்கி கேட்ட 21 வயது பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை பெண் தொழிலதிபரான விபூதி படேல் நடத்தி வருகிறார். ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணியா என்ற பெயரில் இன்ஸ்டாவில் செயல்பட்டு வருகிறார்.     

இவரது, டைல்ஸ் நிறுவனத்தில் ஒக்டோபர் 2 -ம் திகதி நிலேஷ் தல்சானியா என்னும் 21 வயது இளைஞர் பணியில் சேர்ந்தார். ஆனால், எதுவும் சொல்லாமல் தல்சானியாவை ஒக்டோபர் -18 ம் திகதி பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்நிலையில், தான் வேலை செய்த 15 நாள்களுக்கான சம்பளத்தை விபூதி படேலுக்கு தால்சானியா போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு, தான் ஊர் திரும்பியதும் நேரில் வந்து சம்பளத்தை வாங்கிக் கொள்ளுமாறு விபூதி படேல் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சகோதரர் மெஹுல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான பவேஷ் மக்வானா ஆகியோருடன் நிலேஷ் தல்சானியா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, டிடி ரபாரி, ராஜ் படேல், ஓம் படேல், பரீக்ஷித் உள்ளிட்டோர் நிலேஷ் தல்சானியாவை தாக்கியுள்ளனர்.

மேலும், சாதி பற்றி அவதூறாக பேசி தல்சானியாவின் வாயில் செருப்பை திணித்து இது தான் உனக்கு ஊதியம் என விபூதி படேல் கூறியுள்ளார். அதன்பின், எதுவும் செய்ய முடியாததால் நிலேஷ் தல்சானியா அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

பின்னர், உடன் இருந்தவர்களின் கட்டாயத்தின்படி விபூதி படேல் மீது பேரில் மோர்பி காவல்நிலையத்தில் தல்சானியா புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு