மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புகின்ற ஹர்த்தால் தேவையற்றது-ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர்

ஆசிரியர் - Editor III
மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புகின்ற ஹர்த்தால் தேவையற்றது-ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர்

ஹர்த்தாலை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  ஆதரவளிப்பதானது உலக முஸ்லீம்களுக்கு செய்கின்ற துரோகமாகவே பார்க்க முடிகின்றது என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர்  20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு   வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது 

எதிர்வரும் 20 ஆந் திகதி வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஹர்த்தால் ஒன்றினை மேற்கொள்வதாக அறிகின்றோம்.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் இதற்கு ஆதரவு அளிப்பதாக அறிகின்றோம்.தற்போது எமது நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறான ஹர்த்தால்களை முன்வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதே எமது கருத்தாகும்.

அதே வேளை முஸ்லீம் சமூகம் என்ன நிலையில் இருக்கின்றது என்று  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழமை போன்று  பாராமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஒரு வாலாக தொடர்ந்து செயற்படுவதை நாம் அறிந்திருக்கின்றோம்.இன்று உலக மக்களின் கவனத்தில் இருக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினை மற்றும் பொதுமக்கள் அதிகமாக அங்கு கொல்லப்பட்டு கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் இஸ்ரேலுக்கு எதிராக செய்யவில்லை என்ற சூழ்நிலையில் ஹர்த்தாலை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  ஆதரவளிப்பதானது உலக முஸ்லீம்களுக்கு செய்கின்ற துரோகமாகவே பார்க்க முடிகின்றது.

இவ்வாறான ஹர்த்தால் மூலம் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்கின்றாரா என்பதை இவ்விடத்தில் கேட்கின்றோம்.எனவே மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புகின்ற  ஹர்த்தாலை எமது கட்சி கண்டிப்பதுடன் இச்செயற்பாட்டை ஆதரிப்பதில்லை என்ற முடிவினையும் எனது கட்சியின் நிலைப்பாடாகும் என குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு