இந்தியா- இலங்கை இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

ஆசிரியர் - Editor IV
இந்தியா- இலங்கை இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , முயற்சிகளுக்கும் ஆதரவையும்,  ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , முயற்சிகளுக்கும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய - இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் விஜயத்தின் போது, இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு இதன் போது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , முயற்சிகளுக்கும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில் இந்திய இலங்கை பங்குடமையானது வலுவான மூலாதாரமாக இருந்ததாக இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த அதேசமயம், இலங்கை மக்களுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் முன்னொருபோதுமில்லாத வகையில் இந்தியாவால் தக்கதருணத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு விசேட பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி, ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினையும் நம்பிக்கையினையும் இரு தலைவர்களும் இச்சந்திப்புகளின்போது மீள வலியுறுத்தியிருந்த அதேவேளை, நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவும் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களுக்காக ஸ்திரமானதும் சமமானதும் வலுவானதுமான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்தியாவின் ஸ்திரமானதும் துரிதமானதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுடன் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், இரு நாட்டு மக்களிடையே நாகரீக உறவுகள், புவியியல் ரீதியான நெருக்கம், கலாசார தொடர்பு மற்றும் புராதன நன்மதிப்பு ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள இணையற்ற நன்மைகளை சுட்டிக்காட்டியதுடன், பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார செழுமையை உருவாக்கும் வகையில் ஏற்கனவே உள்ள இணக்கப்பாடுகள் மற்றும் ஏனைய மேலதிக வசதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்த நோக்கங்களின் அடிப்படையில், இவற்றை செயல்படுத்தும் முக்கிய கருவியாக, சகல பரிமாணங்களிலும் தொடர்புகளை வலுவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைவாக; இரு தலைவர்களும் கீழ்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

I. கடல் மார்க்கமான இணைப்பு;

பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் பிராந்திய கப்பல் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டு கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வள அபிவிருத்தியில் ஒத்துழைப்பு வழங்குதல்.

இந்தியாவிலுள்ள நாகபட்டினம் மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்தினை மீள ஆரம்பித்தல், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலும் பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட ஏனைய இடங்கள் இடையிலுமான கப்பல் போக்குவரத்தினை விரைவில் மீள ஆரம்பிப்பதற்கான பணிகளை முன்னெடுத்தல்.

II. வான் மார்க்கமான தொடர்பு;

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பித்தமையானது இருநாட்டு மக்களிடையிலுமான உறவுகளை மேம்படுத்தியுள்ள அதேவேளை இச்சேவையினை கொழும்பு வரை விஸ்தரிப்பதற்கும் அதே போல சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய இடங்கள் இடையிலான தொடர்புகளை விஸ்தரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறந்த பொருளாதார பிரதிபலன்களை பெற்றுக் கொள்வதற்காக, பலாலி விமான நிலையத்தின் உட்கட்டமைப்பினை மேலும் அபிவிருத்திசெய்தல் உட்பட சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பினையும் முதலீட்டினையும் வலுவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்.

III.மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இணைப்புகள்;

புதுப்பிக்கத்தக்க சக்தியினை அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, இலங்கையின் முக்கியத்துவமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தியினை அபிவிருத்தி செய்வதற்காக கரையோர காற்றாலைகள் மற்றும் சூரியக்கலங்கள் மூலமான மின்சக்தி உட்பட இலங்கையின் குறிப்பிடத்தக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆற்றலை மேம்படுத்தும், இதன்காரணமாக 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக 70 வீதமான மின் தேவையினை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் இலங்கையின் நோக்கம் வெற்றியடைவதனை உறுதி செய்தல்.

இலங்கையில் மின்சார உற்பத்தி செலவினத்தை குறைப்பது மட்டுமல்லாமல் இலங்கைக்கான அந்நியச் செலாவணிக்குரிய நம்பகமான மற்றும் வலுவான தளத்தினையும் உருவாக்கும் நோக்குடன் BBIN நாடுகள் உட்பட இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் நேரடியான வர்த்தக மின் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உயர்வலு மின்சக்தி விநியோகக் கட்டமைப்பினை ஸ்தாபித்தல்.

இலங்கையின் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலங்களை அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் ஊடாக பசுமை ஹைட்ரோஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகியவற்றில் ஒத்துழைப்பினை விஸ்தரித்தல் மற்றும் சம்பூரில் சூரியமின்கல திட்டம் மற்றும் எல்.என்.ஜி திட்டம் ஆகியவை குறித்த புரிந்துணர்வினை துரிதமாக அமுல்படுத்துதல்.

திருகோணமலை எண்ணெய்தாங்கி பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திக்கான தற்போதைய ஒத்துழைப்பானது, திருகோணமலை பிராந்தியத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான எமது பெருமுயற்சியினை பிரதிபலிக்கின்றது, அத்துடன் கைத்தொழில் மின்சக்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான பிராந்திய மற்றும் தேசிய மையமாக திருகோணமலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இலங்கைக்கு மலிவானதும் நம்பகமானதுமான எரிசக்தி வளங்களின் உறுதியான விநியோகத்தினை உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்பொருள் பெற்றோலிய குழாய் கட்டமைப்பினை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு.

இலங்கையின் மேல்நிலை (UPSTREAM) பெற்றோலிய வளத்துறையினை அபிவிருத்தி செய்யும் இலக்குடன் இலங்கை கரைக்கு அப்பாலுள்ள பகுதிகளில் பரஸ்பர இணக்கப்பாட்டுக்கு அமைவாக கூட்டு அகழ்வு மற்றும் ஹைட்ரோகாபன் உற்பத்தியை மேற்கொள்ளல்.

IV.வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி ரீதியான தொடர்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதிகளில் இரு தரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஈடுபாடுகள் மிகவும் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, கொள்கை நிலைத்தன்மை, இலகுவாக வர்த்தகங்களை மேற்கொள்வதை ஊக்குவித்தல், இருதரப்பு முதலீட்டாளர்களுக்குமான வெளிப்படையான அணுகுமுறை ஆகியவற்றின் ஊடாக பரஸ்பர முதலீட்டினை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

மேலும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களின் உரித்துமாற்றல் நடவடிக்கைகளிலும் இலங்கையின் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி மற்றும் பொருளாதார வலயங்களிலும் இந்தியாவிலிருந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்குதல்.

புதிய மற்றும் முன்னுரிமைக்குரிய துறைகளில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பரந்தளவில் மேம்படுத்துதனை இலக்காகக் கொண்டு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கலந்துரையாடல்களை மேற்கொள்தல்.

இந்திய ரூபாவை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக பரஸ்பரம் நன்மை பயக்கின்றதும் வலுவானதுமான வர்த்தக தொடர்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிறுவனங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கல்களை மேலும் மேம்படுத்துவதற்காக UPI தளத்தினை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கொடுப்பனவு முறையினை செயல்படுத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஆட்சி முறையில் இந்தியாவின் துரிதமான டிஜிட்டல் மயமாதல் இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் நிலையியல் மாற்றங்களின் முக்கியமான வினையூக்கியாக அமைந்துள்ளது. அத்துடன் பிரஜைகளை மையமாகக் கொண்ட சேவைகளை ஆக்கபூர்வமான வகையிலும் வினைத்திறன் மிக்கதாகவும் இலங்கை மக்களுக்காக வழங்குவதற்கும், இலங்கைக்கான தேவை மற்றும் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பினை பயன்படுத்துவதற்கும் இணங்கப்பட்டுள்ளது.

V. மக்கள் - மக்கள் தொடர்பு

சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் பௌத்த வளாகங்கள் மற்றும் இராமாயண யாத்திரை, அதேபோல இலங்கையில் உள்ள புராதனமான பௌத்த, இந்து மற்றும் ஏனைய மதங்களின் வழிபாட்டு இடங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றினை பிரபலமாக்குதல்.

இலங்கையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் புதிய உயர் கல்வி மற்றும் தொழில் திறன் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதன் ஊடாக இருதரப்பிலும் கல்வி சார்ந்த நிறுவனங்களிடையிலான ஒத்துழைப்பினை கண்டறிவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

விவசாயம், நீர்வளம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி மற்றும் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் மருத்துவம், பூமி மற்றும் சமுத்திர விஞ்ஞானம், சமுத்திரவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை குறித்தும் அதேபோல வரலாறு, கலாசாரம், மொழிகள், இலக்கியம், மத ரீதியான கற்கைகள் மற்றும் ஏனைய மானிடப் பண்பியல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பினை விஸ்தரித்தல்.

இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தினை விஸ்தரிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஸ்தாபித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால உறவினை மேலும் அபிவிருத்தி செய்தல். இவ்வாறான தொடர்பினை ஸ்தாபிப்பது குறித்த ஆய்வு மிகவும் கிட்டிய காலத்தில் ஆரம்பிக்கப்படும்.

இந்த அடிப்படையில், இப்பரந்த பிராந்தியத்திலும் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை உறுதிப்படுத்துவதற்கான இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கியத்துவமிக்க தருணத்தையும் நீண்டகால மார்க்கத்தினை வழங்குவது மட்டுமல்லாமல் மேம்படுத்தப்பட்ட பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைமீது கட்டி எழுப்பப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்திய இலங்கை உறவுக்கான எதிர்கால பாதையினையும் வடிவமைக்கின்ற இந்த பகிரப்பட்ட இலக்கினை துரிதமாக எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இரு தலைவர்களும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று முற்பகல் டெல்லியில் இடம்பெற்றது.

இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஹைதராபாத் இல்லத்தில் வைத்து அன்புடன் வரவேற்றார்.

இதன்பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், நீண்டகால இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்து மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு