ஹஸரங்கவின் இடத்தை தனதாக்கிய ரஷீட் கான்

ஆசிரியர் - Editor II
ஹஸரங்கவின் இடத்தை தனதாக்கிய ரஷீட் கான்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள சிறந்த ரி-20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில், ஆப்கானிஸ்தானின் அனியின் தலைவர் ரஷீட் கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றுமுடிந்த 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-1 என வெற்றிக்கொண்டது. 

அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரலாற்றில் முதல் தடவையாக ரி-20 தொடர் வெற்றியொன்றினையும் அவ்வணி பதிவுசெய்திருந்தது.

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீட் கான் 3 இலக்குகளை கைப்பற்றினார். 

இதன் மூலம் இரண்டாவது இடத்திலிருந்த ரஷீட் கான், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவை பின்தள்ளி பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ரஷீட் கான் 710 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளதுடன், வனிந்து ஹஸரங்க 695 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 

அதேநேரம், பாகிஸ்தான் தொடரில் 5 இலக்குகளை வீழ்த்தியிருந்த பசல்ஹக் பரூகி 12 இடங்கள் முன்னேறி வனிந்து ஹஸரங்கவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு