மீனவ பிரச்சினையை இந்திய அரசியல்வாதிகள் அரசியலாக்க கூடாது

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனை, இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.
இதன்போது, இரு நாட்டு மீனவ பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கு தாங்கள் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக இந்திய மீனவ பிரதிநிதிகள் தனக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவின் கடல் வளத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் இந்திய இலங்கை மீனவ பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தி அரசியலாக்க முன்படுகின்றார்கள். எனவே, இந்திய அரசியல்வாதிகள் இந்திய மீனவர்களின் பக்கம் நின்று அந்த மீனவர்களுக்கு உரிய முறையிலான திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் இலங்கையின் எல்லைக்குள் அவர்கள் வரமாட்டார்கள். எங்களின் கடல் வளமும், மீனவர்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றகரமாக அமையும். எனவே, இந்த மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் எங்களது கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கான ஒரு சுமூகமான தீர்வை பெற்றுக் கொள்ளமுடியும் என்றார்.
இதேவேளை, இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் இலங்கை மீனவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெறவுள்ளது. எல்லைத்தாண்டும் விடயம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் எங்களது மீனவ சங்கங்கள், மீனவர்களுடன் பேசுவதற்காக இன்னும் சில கால அவகாசம் கேட்டுள்ளோம்.
இன்றைய எம்.பியுடனான பேச்சுவார்த்தையிலும் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளது. தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பிலும் நாங்கள் அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
மேலும், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வெகுவிரைவில் சிறையிலிருந்து விடுவித்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அடுத்தகட்டமாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளோம். இரு நாட்டு அரச அதிகாரிகளும், இரு நாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும் என்றார்.