துன்னாலையில் கைதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சித்திரவதை காரணமாக கோமா மயக்க நிலையில்!
துன்னாலை பகுதியில் கைதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சித்திரவதை காரணமாக கோமா மயக்க நிலையில் தற்போதுவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் துன்னாலை பகுதியில் வைத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி காவல்நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துன்னாலை பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.அதனையடுத்து மூண்ட வன்முறைகளினையடுத்து இலங்கை காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டிருந்தது.காவல்துறை மீதும் தாக்குதல்;கள் நடத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு இளைஞர்கள் பலர் சந்தேகத்தில் கைதாகியிருந்தனர்.
தற்போது வரை கைதுகள் தொடர்கின்றன. கைதான பலர் கடுமையான சித்திரவதைகளிற்கு உள்ளாகியிருந்தனா இந்நிலையிலேயே சாவகச்சேரி காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.