பொதுமக்கள் அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விளக்கம்...

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விளக்கம்...

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்படவேண்டிய தேவையில்லை. என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையில் சேவைகள் வழக்கம்போல் நடந்துவருவதாகவும் கூறியுள்ளார். 

மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்திருந்தது. 

இதேநேரம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக கொரோனா நோயாளர்கள் பாவிக்கும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய நிலை காணப்பட்டதால், 

அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட திருத்த வேலை காரணமாக தொடந்து தெல்லிப்பழையில் எரிப்பதில் இடர்பாடான நிலை காணப்படுகிறது.

இப்போது நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஒரு எரியூட்டி இயந்திரத்தினை பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் பொருத்தி பாவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்.மாநகர சபையுடன் கலந்துரையாடி 

கோம்பையன் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது. 

 கோம்பையன் பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றினை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம்தொடர்பில் கலந்துரையாட உள்ளோம். 

அதேபோல் அந்த நிலைமை கைகூடும் வரை வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தனியார் நிறுவனங்கள் மூலம் எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எரியூட்டி நிலையத்தினை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும் அதேபோல மருத்துவ கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது. 

தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. 

வழமை போல் வைத்தியசாலையில் சேவைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. வழமைபோல் பொதுமக்கள் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வைத்தியசாலையிலும் மருத்துவ கழிவு என்பது இன்றியமையாதவை.

எனினும் விரைவில் எமது வைத்தியசாலைக்கென தனியான எரியூட்டி ஒன்று அமைப்பதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு