பிளவடைந்தது ரெலோ? சுமந்திரன் வீட்டில் செல்வம் அணி

ஆசிரியர் - Editor II
பிளவடைந்தது ரெலோ? சுமந்திரன் வீட்டில் செல்வம் அணி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை, ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று அவசரமாக சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெலோவின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட போவதில்லை என ரெலோ அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்றைய சந்திப்பின் போது “குறித்த அறிவிப்புக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் புதிய முறையிலான தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.

இதற்கு தமிழரசுக் கட்சி உதவி செய்ய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய எம்.ஏ.சுமந்திரன்,

“இரண்டு பக்கங்களிலும் எழுந்துள்ள கோரிக்கைகளை நியாயப்பூர்வமாக ஆராய்ந்து, எதிர்வரும் தேர்தலை மிகவும் பலத்துடன் எதிர்கொள்வோம்” என கூறியுள்ளார்.

மேலும், இன்றைய சந்திப்பு மிகவும் சுமூகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக ரெலோ அமைப்பின் முடிவுகளில் மாற்றம் எதுவுமில்லை என அதன் செயலாளர் என்.சிறீகாந்தா இன்று கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரெலோவின் செயலாளர் என்.சிறீகாந்தா இவ்வாறு அறிவித்திருக்கும் நிலையில், அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரனை இன்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், ரெலோ அணியினர் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் ஆய்வாலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு