கையில் குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்த பெண்கள் மற்றும் அவர்களை வைத்து தொழில் செய்தவர் உட்பட 5 பேர் விளக்கமறியலில்! 7 குழந்தைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
கையில் குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்த பெண்கள் மற்றும் அவர்களை வைத்து தொழில் செய்தவர் உட்பட 5 பேர் விளக்கமறியலில்! 7 குழந்தைகள் மீட்பு..

கையில் குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்களும், ஆண் ஒருவரும் அவர்களை வேலைக்கு அமர்தியவரும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 7 சிறுவர்கள் சிறைச்சாலை உத்தியோகஸ்த்தர்களின் கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டுள்ள நிதிமன்றம் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களிடம் கையளிப்பதற்காக மன்றில் முற்படுத்துமாறும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். 

யாழ்.நகரப்பகுதி மற்றும் நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் ஊதுபத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். 

யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டு ஊதுபத்தி வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று பல முறைப்பாடுகள் வழங்கப்பட்ட போதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ந்த விடயம் வடமாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உத்தரவில் நேற்றுமுன்தினம் 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் விடுதி உரிமையாளர் என ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் பாதுகாப்பிலிருந்த கைக்குழந்தை உள்பட 8 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர், 3 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் வரும் செப்ரெம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கைக்குழந்தையை தாயாருடன் இருக்க அனுமதித்த மன்று சிறுவர்களை நேற்றைய தினம் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டது.

அத்துடன் இன்று சிறுவர்களை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க மன்றில் முற்படுத்துமாறு நீதிவான் கட்டளையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு