கடமை நேரத்தில் ஊழியர்கள் ஆழ்ந்த உறக்கம், சீறிபாய்ந்த வைத்தியர்..! அரச ஊழியர்களிடம் பெற்றோல் செற்றில் மக்கள் கேட்பது சரிதானா?

ஆசிரியர் - Editor I
கடமை நேரத்தில் ஊழியர்கள் ஆழ்ந்த உறக்கம், சீறிபாய்ந்த வைத்தியர்..! அரச ஊழியர்களிடம் பெற்றோல் செற்றில் மக்கள் கேட்பது சரிதானா?

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு இரவு 10.15 மணிக்கு சிகிச்சை பெற சென்றிருந்தபோது அங்கே கடமை நேரத்தில் ஊழியர்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் மற்றும் வைத்தியர் பொறுப்பற்று நடந்துகொண்ட விதம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவு இங்கே..

நண்பர் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில், இன்று இரவு 10.15 மணியளவில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தோம். குறித்த நேரத்தில் எடுத்த படம் முதல் படம் அல்ல. 

ஆயினும் அனுமதி அறையில் மூன்று கடமை நேர ஊழியர்கள் நித்திரையில் இருந்தனர். அவர்களை எழுப்பி 10 மணிக்கே நித்திரையா என கேட்டிருந்தேன். அவர்கள் திடுக்கிட்டு எழுந்து என்ன என்று கேட்டனர். 

விபத்து சம்பவம் தொடர்பில் கூறியதை அடுத்து, ஒருவர் வைத்தியரிடம் கூட்டி வருமாறு கூறினார். என்னுடன் வந்த மற்றொரு நண்பர் அவரை வைத்தியரிடம் அழைத்து சென்றார். 

உண்மையில், கடமை நேர ஊழியரே அழைத்து செல்ல வேண்டும். கூட்டி சென்ற நபரை வைத்தியர் தகவல் கேட்கும் பட்சத்தில் சொல்ல வேண்டும். ஆயினும் அதனைக் கூட மனிதாபிமானத்துடன் பொறுத்துக்கொண்டோம்.

எமது நண்பரை 4ம் விடுதியில் அனுமதிக்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முடித்து விடுதிக்கும் எவ்வித ஏற்பாடும் இல்லாமல் நாமே கொண்டு செல்லவேண்டி ஏற்பட்டது.

வைத்தியசாலை முறைப்படி வைத்தியர் பணிப்பிற்கமைவாக, கடமை நேர ஊழியர்கள் நோயாளியை அழைத்து சென்று விடுதியில் ஒப்படைக்க வேண்டும். அது நடைபெற்றிருக்கவில்லை. 

மாறாக நோயாளரிடம் அனுமதி துண்டு வழங்கப்பட்டது. எனது நண்பரும், நானும் விடுதிக்கு அழைத்து சென்றோம். அங்கு கடமையில் இருந்த தாதிய உதவியாளர்களும் கடமை மேசையில் நித்திரையாக இருந்தனர். 

அழைத்து சென்ற நோயாளியான எமது நண்பரை இருக்கை ஒன்றில் அமர்த்திவிட்டு, வைத்தியர் பகுதிக்கு சென்று வைத்தியரின் அனுமதி சிட்டையை கையளித்தோம்.

வைத்தியர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒருவர் அநாகரிகமாக வெளியேறுமாறு கூறினார். நாம் விடுதிவரை செல்லவேண்டிய தேவை எமக்கு இல்லை. 

வைத்தியசாலை தனது கடமையை முழுமையாக செய்தால் வை(பை)த்தியர்களிடம் அநாகரிக வார்த்தை பிரயோகங்களிற்கு முகம் கொடுக்க வேண்டியதில்லை.

திரும்பும்போது, சுமார் 15 நிமிடங்களில் OPD ஊழியர்கள் மீண்டும் நித்திரையில். முதலாவது படம் அதனையே காண்பிக்கின்றது.இதன் பின்பும் சம்பவம் நடைபெற்றது. 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பரிற்காக சில பொருட்களை வாங்கி வரும்போது, விடுதி படியோரம் சிவில் உடையில் இருவர் நின்றனர். வைத்தியருடன் என்ன பிரச்சினை என்றனர். 

ஒன்றும் அவருடன் பிரச்சினை இல்லை என்றோம். எனது மற்ற நண்பருடன் விடுதிக்கு சென்றனர். பின்னர் என்னை வருமாறு அழைத்தனர். சென்றேன். வைத்தியர் வகுப்பு எடுத்தார். 

கடமையை செய்ய தவறியது வைத்தியசாலையேயன்றி, நாம் இல்லை என்றேன். எனது வரிப்பணமும் உங்கள் சம்பளத்தில் உள்ளது. மக்களிற்கான சேவையை முழுமையாக செய்யுங்கள். 

இரவு வேலைக்கு நேர அட்டவணையிடப்பட்டு பணியாளர் மாற்றப்பட வேண்டும். அதை சீர் செய்யுங்கள் என்றேன். முறைப்பாடு தொடர்பில் எழுத்து மூலமாக பொலிசாருக்கு அல்லது வைத்தியசாலை பொறுப்பதிகாரிக்கு வழங்குங்கள்.

இத்தனைக்கும் CCTV ஆதாரம் மற்றும் என்னிடம் உள்ள ஆதாரங்களுடன் விசாரணையில் சந்திப்பேன் எனவும், விடுதியில் விசாரணைக்கு யாருக்கும் அனுமதியில்லை எனவும் தைரியமாக கூறி வீடு திரும்பினேன்.

பெற்றோல் செற்றில சனங்கள் கேட்ட கேள்வி சரிதான் என்று சிரித்துக்கொண்டு வீடு திரும்பினோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு