மாநகர சபை முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவம் -யாழ் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாவின் வாழ்த்துச் செய்தி

மாநகர சபை முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவம் -யாழ் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாவின் வாழ்த்துச் செய்தி
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் வட்டாரங்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற நியமன உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதான விசேட வர்த்தமானி அறிவித்தல் (31) வெளியாகி இருந்தது.
இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலின் பிரகாரம் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற மூன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவ உறுப்பினர் நியமனங்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் முஸ்லிம் பெண் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்த றிபைன் பாத்திமா றிஸ்லா அவர்களும் மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எமது கௌரவ மாநகரசபை உறுப்பினர் றிஸ்லா அவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
றிஸ்லா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி முஸ்லிம் பெண் மாநகரசபை பிரதிநிதித்துவமே யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அரசியல் ஆளுமையை அடையாளம் காட்டியிருப்பதுடன், முதல் பெண் மாநகரசபை உறுப்புரிமையினையும் எமக்கு வழங்கியிருக்கின்றது. இது வரலாற்றில் பதியப்படும் சந்தர்ப்பமாகும். இந்த வரலாற்றை உருவாக்கியிருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உள்ளுராட்சி தேர்தலில் கட்சியின் தலைமை தொடர்ந்து வழங்கிவரும் யாழ் முஸ்லிம் பெண் பட்டியல் வேட்பாளர் நியமனம் மற்றும் இம்முறை தேர்தலுக்குப் பின்னரான கட்சியின் தீர்மானம் பிரகாரமான யாழ் மாநகரசபைக்கான முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவமானது ஒட்டு மொத்த யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கௌரவப்படுத்தியுள்ளமையை வெளிக்காட்டி நிற்கின்றது.
முஸ்லிம் பெண் மாநகர சபை உறுப்புரிமையை வழங்கியிருக்கும் கட்சியின் தீர்மானமானது வடக்கும் முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், இலங்கையின் வெளி மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் தொடர்ச்சியான திடமான அரசியல் பயணத்திற்கும், எமது மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இருப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுக்கும் தமிழ் அரசுக் கட்சி ஊடான மாநகரசபை பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் பங்களிப்பைச் செய்யும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாகவும், நம்பிக்கையாகவும் காணப்படுகின்றது.
இம்முறை யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முஸ்லிம் பெண் உறுப்பினர் நியமனத்தை உறுதி செய்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் தொகுதி கிளைத் தலைவர் சிறில் ஐயா மற்றும் செயலாளர் இ.ஆர்னோல்ட் ஆகியோருக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பாக நாம் நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.