SuperTopAds

தமிழ் தேசியத்திற்கு நேர்மாறாக செயற்படும் தரப்புடன் கூட்டுசேர்ந்து பதவிகளை பெறுவதுதான் நோக்கமா?

ஆசிரியர் - Editor II
தமிழ் தேசியத்திற்கு நேர்மாறாக செயற்படும் தரப்புடன் கூட்டுசேர்ந்து பதவிகளை பெறுவதுதான் நோக்கமா?

தமிழரசு கட்சி ஈபிடிபியுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டதை மூடி மறைப்பதற்காகவே எமது தரப்பில் ஒரு சிலர் ஈபிடிபியுடன் பேசவுள்ளதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டதாக   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட  ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்.

எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் குறிப்பாக சுரேஸ்பிரேமசந்திரனும் சித்தார்த்தனும் ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப்போவதாகவும், அவர்களின் ஆதரவை ஆட்சியமைப்பதற்கு கோருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தி முற்றிலும் தவறானது.  ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும், தமிழ்தேசிய பேரவைக்கும் இடையில் நடைபெற்ற கொள்கை ரீதியிலான ஒப்பந்தத்தை கொச்சை படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான அந்த செய்தியை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

தமிழரசுக்கட்சி ஈபிடிபியின் தலைவரை சந்திப்பதற்கு முடிவெடுத்திருந்த ஒரு நிலையில், அந்த பொய்ச்செய்தியை பரப்பிய ஊடகங்கள் தமிழரசுக் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக செயற்படுவதனால், தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் நடத்தவிருக்கின்ற சந்திப்பையும் அவர்களின் அந்த கூட்டையும் நியாயப்படுத்துவதற்காக தமிழ்தேசிய பேரவையும் ஜனநாயக கூட்டணியும் கூட ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு  தயாராகியிருந்தன, 

தமிழரசும் அதைத்தான் செய்தது, ஆனால் ஈபிடிபி இறுதியில் வந்து தமிழரசுடன் விரும்பியது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டை நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தியாகும்.

மேலும்  மக்கள் வழங்கிய ஆணைக்கு, தமிழ் தேசியத்திற்கு  நேர்மாறாக செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்ந்து பதவிகளை பெறுவதுதான் நோக்கம் என்றால் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் தரப்பினரான எம்மோடு சேருங்கள், பதவிகளை உறுதிப்படுத்த நாங்கள் தயார் என தெரிவித்தார்.