SuperTopAds

தமிழரசுக் கட்சியும் கூட்டுக்குள் வரத்தடையில்லை

ஆசிரியர் - Editor II
தமிழரசுக் கட்சியும் கூட்டுக்குள் வரத்தடையில்லை

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், தமிழ்த் தேசியப் பேரவையினதும் கூட்டு என்பது சுமந்திரனுக்கு எதிரானது அல்ல. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எமது கூட்டணியில் இணையவேண்டும். அவர்கள் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் அவர்களுக்கான ஆதரவை வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் . 

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தக் கூட்டு இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான சமஷ்டி முறையை உருவாக்குவதற்கான கூட்டு ஆகும் . இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இதில் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். 

எங்களின் கோரிக்கைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே.சிவஞானத்திடம் கையளித்தோம். அது நிராகரிக்கப்பட்டது. 

அது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். 

அவர்கள் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அனைவருடனும் இணைந்து செல்லவேண்டும் என்ற அடிப்படையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசினோம். சுமந்திரனுடனும் பேசினோம். அனைவருடனும் பேசிக்கொண்டிருக்கின்றோம். இருதரப்புக்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன. மூன்றாவது தரப்பு எந்த முடிவும் சொல்லாது அமைதியாக இருக்கின்றது என்றார்.