அறம் தவறிய மனிதர்களை இயற்கை நிச்சயம் தண்டித்தே தீரும்!

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈபிடிபியின் ஆதரவைக் கோரி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை சென்றிருந்தார்.
சந்திப்பின் பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
குறித்த சந்திப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூலில் ஒரு பதிவை இடுகை செய்துள்ளார்.
அதில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்கு பதில் கருத்து வழங்கும் பாராளுமன்ற காணொளி ஒன்றை பதிவிட்டு அதன் தளம் “ அறம் தவறிய மனிதர்களை இயற்கை நிச்சயம் தண்டித்தே தீரும்! காலம் மிகவும் பொல்லாதது!! எனப் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவின் கீழ் தமிழரசுக்கட்சிக்கு எதிரான கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றமையை காணக்கூடியாதாக இருந்தது.