60:40 அடிப்படையில் ஆசனப்பங்கீடு - கூட்டமைப்புக்குள் இணக்கம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தவிசாளர் பதவி பெறும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்கு அந்தச் சபையில் 60 வீதமான வேட்பாளர்களை நியமிப்பது என்றும் ஏனைய இரு கட்சிகளும் எஞ்சிய 40 வீதத்தைப் பங்கிடுவதும் என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடுவது என்றும் மூன்று கட்சிகளும் உடன்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பங்காளிக் கட்சிகள் நேற்று கூடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாகக் கலந்துரையாடின. அதில் 60:40 என்ற இணக்கபாடு எட்டப்பட்டது.
தேர்தலில் வென்ற பின்னரே தவிசாளரைத் தீர்மானிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தவிசாளர் நிறுத்தப்படும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்களின் சதவீதம் 60 ஆக இல்லாவிட்டால் விகிதாசார அடிப்படையில் கிடைக்கும் நியமன ஆசனங்களைத் தவிசாளர் தெரிவாகும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
தவிசாளர் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டால் மற்றைய கட்சிக்கு உப தவிசாளர் பதவி வழங்கப்படும். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றிக்கு மூன்று கட்சிகளுமே இணைந்து பாடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியது. உள்ளூராட்சிமன்றத்தின் தவிசாளர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு எதிராக ஏனைய கட்சிகள் இணைந்து செயற்பட்டன. அதனால் வரவு – செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றமே கலைக்கப்பட்ட பல குழப்பங்கள் நடந்திருந்தன. அந்தப் படிப்பினையின் அடிப்படையிலேயே 60:40 என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று அறியமுடிகின்றது.