நாடாளுமன்ற உறுப்பினரும், அவருடைய பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்..! தற்கொலை அல்ல, பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் அம்பலம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினரும், அவருடைய பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்..! தற்கொலை அல்ல, பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் அம்பலம்..

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் சிக்கி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய பாதுகாவலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நிட்டம்புவ நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவருடைய பாதுகாவலர் தப்பி ஓடி அடைக்கலம் தேடிய நிலையில் அங்கு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டபோதும் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், கடுமையாக தாக்கப்பட்டமையால் எலும்புகள் சிதைவடைந்து உள்ளக இரத்தக் கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்தனகல்ல ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் சடலத்துக்கு அருகே இருந்து சடலமாக மீட்கப்பட்ட அவரது மெய்ப்பாதுகாவலரான அஹங்கம விதானகே ஜயந்த குணரத்ன எனும் பொலிஸ் சார்ஜன்ட்டின் மரணமும் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையூடாக தெரியவந்துள்ளது. 

அவரது சடலம் மீதும் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார். பொலிஸ் சார்ஜன்ட்டின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் பல காயங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன. 

துப்பாக்கி குண்டு அவரின் மார்பு வழியே நுரையீரலை துளைத்துக்கொண்டு உடலின் மறுபக்கமாக வெளியேறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த காயமும், தலையில் பலமாக தாக்கப்பட்டமையால் மண்டை ஓடு வெடித்து மூலைக்குள் இரத்தம் கசிந்தமையும் அவரது மரணத்துக்கு காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை ஊடாக தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் இது குறித்த விசாரணைகள் நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.பி. அபேரத்னவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பில், கடந்த 9 ஆம் திகதி அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், 

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பொலன்னறுவை நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார். இதன்போது அவரது வாகனம் நிட்டம்புவையில், கொழும்பு - கண்டி வீதியை மறித்து பொது மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கியுள்ளது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்க முயலவே, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக அறிய முடிகிறது. இதனால் மூன்று பொது மக்கள் துப்பாக்கிச் சூட்டு காயத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 

துப்பாக்கிச் சூட்டையடுத்து நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கிருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஆவேசமடைந்துள்ளனர். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும், நிட்டம்புவ நகரிலுள்ள ஆடையகமொன்றினுள் ஓடி ஒளிந்துள்ளனர். 

எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக விரட்டி சென்றுள்ள நிலையில், அவரது சடலமும் அவரது மெய் பாதுகாவலரின் சடலமும் பின்னர் மீட்கப்பட்டது. இந் நிலையிலேயே முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவை இரண்டும் கடுமையான தாக்குதல்களால் நிகழ்ந்த மரணங்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு