வடக்கு கல்வி அமைச்சின் உதவிச்செயலரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு ஆளுனருக்கு நீதிபதி உத்தரவு!

ஆசிரியர் - Editor I
வடக்கு கல்வி அமைச்சின் உதவிச்செயலரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு ஆளுனருக்கு நீதிபதி உத்தரவு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர அனுமதி வழங்குமாறு, வடக்கு மாகாண ஆளுநருக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். உதவிச் செயலாளர் தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை மனு மீதே இந்தக் கட்டளையை மேல் நீதிமன்றம் வழங்கியது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, புலமைப் பரிசில்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் சென்றிருந்தார். அவர் கடமையிலிருக்கும் போது வெளிநாடு செல்வதற்கான அனுமதி கேட்டு மாகாண ஆளுநருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக விண்ணப்பிருந்தார். அவரது விண்ணப்பத்துக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரால் பரிந்துரை வழங்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் ஜேகூ ஆளுநரின் அனுமதி கிடைக்க முன்னரே அவுஸ்திரேலியா சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் மீள அழைக்கப்பட்டார். நாடு திரும்பிய அவருக்கு அனுமதியின்றி வெளிநாடு சென்ற காரணத்தால் வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் தனது வெளிநாடு செல்லும் விடுமுறைக்கான விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க கட்டளையிடுமாறு கோரியும் உதவிச் செயலாளர் ஜேகூ யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கட்டளையை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநரால் மனுதாரரான ஜேகூவாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் ஆளுநரால் அதிகாரம் பகிர்தளிக்கப்பட்ட பிரதம செயலாளர் மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்தே ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே மனுதார்ர் வெளிநாடு சென்றமையில் நிர்வாக மீறல் கிடையாது.

வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்துக்குட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றுக்கு உள்ளது. அதனடிப்படையில் மனுதாரர் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க மன்று கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளையின் பிரதி அஸ்திரேலிய தூதரகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்' என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு