12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட விசேட கவனம் தேவைப்படும் சிறுவர்களுக்கு நாளை தொடக்கம் தடுப்பூசி! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட விசேட கவனம் தேவைப்படும் சிறுவர்களுக்கு நாளை தொடக்கம் தடுப்பூசி! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

வடமாகாணத்தில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படும். என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான பைஸர கோவிட்-19 தடுப்பூசியானது முதற்கட்டமாக மேற்கு மாகாணம், குருநாகல் மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் 

செப்ரெம்பர் 24ம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. சுகாதார அமைச்சானது அடுத்த கட்டமாக வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கு 

இத் தடுப்பூசியினை வழங்க முடிவு செய்துள்ளது. இத்தடுப்பூசியானது சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

எனவே வடமாகாணத்தில் குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் உள்ள வைத்தியசாலைகளில், 

யாழ்.மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 

மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. பின்வரும் நோய்நிலைமையுள்ள சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

1. நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நிலை

2. வேறு நோய்நிலைமைகளால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புக் குறைபாடு ( இரத்தப் புற்றுநோய் மற்றும் ஏனைய புற்றுநோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்கள் உட்பட)

3. குருதியுடன் தொடர்படைய நோய்நிலைமைகள்

4. அகச்சுரப்புக்கள் தொடர்பான நோய்நிலைமைகள்

5. நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள்

6. பிறப்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்கள்

7. வேறு ஏதாவது மரபணு / அனுசேப அசாதாரணநிலைமையுடையவர்கள்

8. நாட்பட்ட இதய நோய்நிலைமைகள்

9. நாட்பட்ட சுவாச நோய்நிலைமைகள்

10. நாட்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய்நிலைமைகள்

11. நாட்பட்ட உணவுக்கால்வாய் மற்றும் ஈரல் தொடர்பான நோய் நிலைமைகள்

12. நாட்பட்ட மூட்டுவாத நோய்நிலைமைகள்

13. நாட்பட்ட உளநல பிரச்சனைகள் உடையவர்கள்

14. வேறு ஏதாவது குறிப்பிடப்பட்ட நோய் நிலைமைகளுக்காக குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள்.

இக்குறிப்பிட்ட நிலைமையுடைய 12 தொடக்கம் 19 வயதினருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களது பிள்ளையின் மருத்துவ அறிக்கைகளை தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகள் ஏதேனும் ஒன்றில் சமர்ப்பித்து 

தமது பிள்ளைகளுக்குரிய தடுப்பூசியினை வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி முதல் பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவ்வாறான விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்நிலைமையுடைய 12 தொடக்கம் 19 வயதுடைய பிள்ளைகள் தொடர்பாக

அறிந்த சுகாதாரப் பணியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் அப்பிள்ளைகள் தொடர்பான விபரங்களை உங்கள் பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அறியத்தருமாறும், இத்தகவலை அவர்களுடைய பெற்றோர்கள் 

அல்லது பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கும்படியும், அச்சிறுவர்களை தடுப்பூசி வழங்கும் வைத்தியசாலைகளுக்கு அனுப்ப ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு