SuperTopAds

புதுக்குடியிருப்பில் பொலிஸ் துரத்தியதால் குளத்தில் குதித்த குடும்பஸ்தர் மரணம்!

ஆசிரியர் - Admin
புதுக்குடியிருப்பில் பொலிஸ் துரத்தியதால் குளத்தில் குதித்த குடும்பஸ்தர் மரணம்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு இடைக்கட்டுகுளத்தில் பொலிசார் துரத்திச் சென்ற போது குளத்தில் குதித்த ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று மாலை 2 மணியளவில் இடைக்கட்டு குளத்தின் அலைகரை பக்கம் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்கும் முகமாக சுற்று நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார், குளத்து அலைகரையில் நின்ற மூவரை துரத்தி சென்றபோது மூவரும் குளத்தில் குதித்துள்ளனர்.

ஒருவர் நீந்தி செல்லும் போது நீரில் மூழ்கியுள்ளார். மற்றுமொருவர் நீந்த முடியாத நிலையில் பொலிசாரிடம் மீள வந்து சரணடைந்துள்ளார். இரண்டு மணிக்கு நீரில் மூழ்கியவரை மாலை 6 மணியளவில் அயலவர்கள் தேடி சடலமாக மீட்டபோதும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தராததால் அங்கு குழப்பநிலை தோன்றியது. அங்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் பொலிசாருக்கு தகவல் வழங்கி இரவு 8 மணியளவில் குறித்த பகுதிக்கு பொலிசார் வருகை தந்து சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் குரவில், உடையார்கட்டு தெற்கு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மகேஸ்வரன் ராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.