மணல் அகழ்வை தட்டிக்கேட்ட இளைஞனை காணவில்லை..! வாள்களுடன் புகுந்து அட்டகாசம், ஒருவர் காயம், யாழ்ப்பாணத்தில் மணல் மாபியாக்கள் அட்டூழியம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை வல்லிபுர குறிச்சி பகுதியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட இளைஞன் காணாமல்போயுள்ளதுடன், அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடத்து நொருக்கியதுடன் முதியவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது குறித்து சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினரிடம் காணாமல்போனதாக கூறப்படும் இளைஞன் ஆட்சேபனை தெரிவித்து தொடர்ந்தும் மணல் அகழ்வில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் நேற்று மாலை குறித்த வீட்டிற்கு வாள்களுடன் மிரட்ச் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த வீட்டார் பருத்தித்துறை பொலிஸில் மிரட்டல் சம்பவம் குறித்து முறையிட்டதாகவும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு குறித்த வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை வாள்களால் கொத்தியும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை வாள்களுடன் வந்து மிரட்டிய நிலையில் அச்சமடைந்த குறித்த வீட்டார் அயல் வீட்டில் சென்று இரவு தங்கியிருந்த நிலையில் அங்கும் அத்துமீறி உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அவர்களை தாக்க முற்பட்ட போது தடுக்க முற்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்த முதியவரை தாக்கி படுகாயத்திற்குள்ளாக்கிச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் சிங்கை நகர் வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா என்ற 68 வயதான முதியவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர குறித்த பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவையும் வாள்வெட்டுக் குழுவினர் கொத்தி சேதமாக்கிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் காணிக்கு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் என்ற 24 வயதான இளைஞனை நேற்று மாலை முதல் காணவில்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குடி நீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள நிலையில், இன்று வடமராட்சி முகாவில் பகுதியில் இருந்து அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகனத்தினால் மோதி சேதமாக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் குறித்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியவில்லை என குடும்பத்தார் கூறுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்புடையதாக கருதப்படும் டிப்பர் வாகனம் ஒன்றை பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு