வடமாகாண கல்வியமைச்சரின் பதவி பறிபோகுமா? ஓரிரு தினங்களில் முடிவு!
தேசியக் கொடியை நிராகரித்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் மீதான நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிற்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பான எழுத்துமூல அறிவிப்பை சட்ட மா அதிபர் திணைக்களம் ஆளுநரிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவிற்கு நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பை வடமாகாண ஆளுநர் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வவுனியா இரட்டைப்பெரிய குளம் பகுதியிலுள்ள அரச பாடசாலையொன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண கல்வியமைச்சர், தேசியக் கொடியை ஏற்றுவதை நிராகரித்த சம்பவம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
தேசியக் கொடியை நிராகரித்த அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே வடக்கு ஆளுநரிடம் சட்ட மா அதிபர் திணைக்களம், கடிதம் மூலம் இதற்கான ஆலோசனையை அனுப்பி வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதன்படி வடமாகாண கல்வியமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை குறித்து அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.