வடமாகாண ஆளுநர் மீதான கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மனு!

ஆசிரியர் - Editor II
வடமாகாண ஆளுநர் மீதான கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மனு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரிதாஸன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர மாகாண ஆளுநர் விடுப்பை வழங்கி அனுமதிக்கவேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய உறுதிகேள் எழுத்தாணை மீதான கட்டளையை ஆட்சேபித்து சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு ஊடாக இந்தக் கட்டளை மீது ஜனவரி 3ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவைப் பெறவும் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூஇ புலமைப் பரிசில்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் சென்றிருந்தார்.

அவர் கடமையிலிருக்கும் போது வெளிநாடு செல்வதற்கானஅனுமதிகேட்டு மாகாண ஆளுநருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பத்துக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரால் பரிந்துரை வழங்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும் ஜேகூ ஆளுநரின் அனுமதி கிடைக்க முன்னரே ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் மீள அழைக்கப்பட்டார்.

நாடு திரும்பிய அவருக்கு அனுமதியின்றி வெளிநாடு சென்ற காரணத்தால் வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆளுநரின் இந்நடவடிக்கைக்கு எதிராகவும் தனது வெளிநாடு செல்லும் விடுமுறைக்கான விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க கட்டளையிடுமாறு கோரியும் உதவிச் செயலாளர் ஜேகூ யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி கட்டளையை வழங்கியது.

வடக்கு மாகாண ஆளுநரால் மனுதாரரான ஜேகூவாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் ஆளுநரால் அதிகாரம் பகிர்தளிக்கப்பட்ட பிரதம செயலாளர் மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்தே ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

எனவே மனுதாரர் வெளிநாடு சென்றமையில் நிர்வாக மீறல் கிடையாது.வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்.

எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்திற்கு உட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றுக்கு உள்ளது.

அதனடிப்படையில் மனுதாரர் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க மன்று கட்டளையிடுகிறது.

இந்தக் கட்டளையின் பிரதி அவுஸ்திரேலிய தூதரகத்துக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும்' என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இந்தக் கட்டளையை ஆட்சேபித்தே மனுவின் பிரதிவாதிகளான வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு