ஊர்காவற்றுறையில் கடற்படையின் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்!

ஆசிரியர் - Editor II
ஊர்காவற்றுறையில் கடற்படையின் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்!

ஊர்காவற்றுறை - பருத்தியடைப்பில் பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கூறி காணி உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமது காணிகளில் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடற்படையினர் தற்போது நிலைகொண்டுள்ள இரண்டு பரப்பு காணியுடன் 25 குடும்பங்கள் வாழ்ந்து வந்த 3 ஏக்கர் காணி, கடற்படையின் முகாமைச்சுற்றி காணப்படும் நிலையில் குறித்த காணியில் மக்கள் குடியிருக்க முடியாத நிலையில அச்சம் நிலவுவதாக தெரிவித்தனர்.

கடற்படையினர் முகாம் அமைத்து தங்கியிருக்கும் குறித்த பகுதியை அண்டிய ஏனைய காணிகளையும் சுவீகரிக்கவுள்ளதாக காணியின் உரிமையாளர் ஒருவருக்கு, கடற்படையினர் காணி திணைக்களத்தினூடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனையடுத்து காணிகளுக்கு சொந்தமான மக்கள் ஒன்றுதிரண்டு இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டாம், வேண்டாம் காணி சுவீகரிப்பு வேண்டாம், எம்மை சொந்த இடங்களில் இருக்கவிடு, நாங்கள் எங்கள் நிலத்தில் வாழவேண்டும் ஆகிய பதாதைகளைத் ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். காணி சுவீகரிப்பை நிறுத்த வேண்டும் என கோரிய மகஜர் ஒன்றையும் கிராம சேவையாளரிடம் கையளித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு