யாழை உலுக்கிய கோரவிபத்து:படுகாயமடைந்த இளைஞனும் மரணம், சடலங்கள் ஒப்படைப்பு

ஆசிரியர் - Admin
யாழை உலுக்கிய கோரவிபத்து:படுகாயமடைந்த இளைஞனும் மரணம், சடலங்கள் ஒப்படைப்பு

யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் மோட்டார்ச் சைக்கிளும், சிறியரக ஹன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயதான இளைஞரொருவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் குறித்த மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்து பயணித்த இளைஞரும் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நேற்றுப் பிற்பகல் யாழ்.குப்பிளானிலிருந்து யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் குறித்த இரு இளைஞர்களும் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் ஊரெழு பலாலி பிரதான வீதியில் நியூ டிசானி பியூட்டி சென்ரருக்கு அருகில் வயாவிளானிலிருந்து  யாழ். நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.

இதன் போது மோட்டார்ச் சைக்கிளை வேகமாகச் செலுத்தி  வந்த இளைஞர் வீதி ஒழுங்கை மீறித் தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில் நேர் எதிராக உரும்பிராயிலிருந்து பயணித்த சிறிய ரக ஹன்ரர் வாகனத்துடன் மோட்டார்ச் சைக்கிள் மோதுண்டது. இந்தச் சம்பவத்தில் குறித்த இரு இளைஞர்களும் பல மீற்றர் தூக்கி வீசப்பட்ட நிலையில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே கோரமான முறையில் உயிரிழந்தார். 

அவருடன் பின்னாலிருந்து பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த இளைஞனும் நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளைஞர்களின் இரு சடலங்களும் மரண விசாரணைகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல்-02.30 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் தற்போது அவர்களின் சொந்த ஊரான குப்பிளான் தெற்குப் பகுதிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு இளைஞர்களின் உயிரிழப்புக்களும் குப்பிளானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மேற்படி இரு இளைஞர்களின் வீடுகளிலும் உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள, நண்பர்கள், அயலவர்கள்,  ஊரவர்கள் எனப் பெருமளவானோர் கூடியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு