யாழ். புங்குடுதீவில் சற்று பதற்றம்! பொலிஸார் குவிப்பு
யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் கடற்படையின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்படையின் வாகனம் மோதி உயிரிழந்திருந்தார்.
கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனமே, மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது.
இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது மாமனார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளதோடு அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.