வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!

ஆசிரியர் - Admin
வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில், இன்று காலை நடைபெறவிருந்த வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, பிற்போடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

நேர்முகத்தேர்வுக்குத் தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த சில முறைப்பாடுகளின் அடிப்படையில், அது தொடர்பில் விசாரணை செய்யும் முகமாகவே, குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

நேர்முகத்தேர்வுக்குத் தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்டப் பிரதிநிதிகள், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, ஆளுநர் செயலகத்தில், இன்று காலை சந்தித்தனர். இதன்போது, அவர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதாக, ஆளுநர் உறுதியளித்தார்.

அத்துடன், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிவரங்களும் அடங்கிய பட்டியல், குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சால் வழங்கப்பட்ட கட்டமைப்புக்கு எதிராக அல்லது தவறான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்குறித்த பட்டியலை வடமாகாண சபையின் https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-external-candidates-who-faced-interview-2/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென, ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு