மதுபானசாலை அனுமதி பெற்ற எம்.பிக்களின் பட்டியலை வெளியிடுங்கள் - ஜனாதிபதியை சந்தித்து சுமந்திரன் கோரிக்கை...

ஆசிரியர் - Editor I
மதுபானசாலை அனுமதி பெற்ற எம்.பிக்களின் பட்டியலை வெளியிடுங்கள் - ஜனாதிபதியை சந்தித்து சுமந்திரன் கோரிக்கை...

மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ( 03) மாலை சுமந்திரனுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட  சந்திப்பொன்று நிகழ்ந்தது. அரை மணி நேரத்திற்கு அதிகமாக நிகழ்ந்த இந்த சந்திப்பில் பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பதான அரசியல் சூழ்நிலைகள், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் என்பன தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி 2015 - 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னடுக்கப்பட்ட தேர்தல் வரைபினை அமுல்படுத்துதல் தொடர்பாகவும், இச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதனையும் சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் ஊழல் ஒழிப்பு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் முறை கேடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சிபாரிசின் பேரில் கொடுத்த மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்களை குறித்ததான சந்தேகத்தினையும் ஏற்படுத்துவதனை அவர் சுட்டிக்காட்டியிருந்ததோடு உடனடியாக அவ் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலினை வெளியிடுமாறும் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக இவ்விடயங்கள் தொடர்பாக தொடர்பாடுவதாகவும் வேண்டிய ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு