கோண்டாவிலில் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்!
இன்று இரவு 9 மணியளவில் கோண்டாவில் அன்னுங்கைப் பகுதியிலுள்ள வீடொன்றை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மெலும் தெரியவருபவை வருமாறு;-
கோண்டாவில் – அன்னுங்கைப் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரின் வீட்டுக்கு, இரு மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மூடியவாறு நான்கு பேர் கொண்ட குழு ஒன்று வந்தது.
பின்னர் குறித்த வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் நின்ற முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வீட்டுக்காரரின் அலறல் குரல் கேட்டு, அப்பகுதி இளைஞர்கள் குறித்த மர்மக் கும்பலைத் துரத்திய போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.