யாழ்ப்பாணத்தில் 3 வயதுக் குழந்தை கோடரி வெட்டுக்குப் பலி! - பேர்த்தி படுகாயம்

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் 3 வயதுக் குழந்தை கோடரி வெட்டுக்குப் பலி! - பேர்த்தி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரனின் 3 வயது மகளை வெட்டிக்கொலை செய்த நபர், தனது தாயாரையும் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, பத்திரகாளி கோவில் வீதியில் உள்ள தனது தாயின் வீட்டுக்குள் நுழைந்த மகன், கைக் கோடரியொன்றினால் தனது தாயையும் சகோதரனின் மகளையும் வெட்டியுள்ளார். இந்நிலையில், சகோதரனின் மகளான 3 வயதுடைய தனுஷன் நிக்ஷயா சம்பவ இடத்திலேயே கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தாயாரான 55 வயதுடைய பரமேஸ்வரி என்பவர் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பிள்ளையின் தாயார் கர்ப்பிணி என்பதால் அவரது கணவனுடன் கிளினிக்கிற்கு சென்றுள்ள நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட மகனான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவர் நஞ்சருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்திற்கு குடும்பப் பிணக்கே காரணம் என சந்தேகிக்கும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு