நல்லூர் மந்திரிமனையை உரிமைகோர எவ்வளவு நெஞ்சழுத்தம்?
எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் மந்திரிமனையை உரிமை கோரும் ஒரு ஓலையுடன் எமது அரச திணைக்களத்துக்கு வந்திருப்பார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் 68ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
'நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் புராதனச் சின்னங்களில் ஒன்றான மந்திரிமனையை உரிமைகோரி ஓலைச்சுவடி ஒன்றுடன் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் யாழ்ப்பாணம் காணிக்கந்தோரில் பிரசன்னமாகியிருந்ததாக நீங்கள் பத்திரிகையில் படித்திருப்பீர்கள்.
அந்தப் பெருமகனார் சிலவேளை சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையைப் படித்துத்தான் அவ்வாறு செய்தாரோ நானறியேன்! சுந்தரமூர்த்தி நாயனாரை தடுத்தாட் கொள்வதற்காக சாட்சாத் சிவனே பொய்யான ஓலைச்சுவடி ஒன்றுடன் தோன்றியது போல இவரும்; பழைய ஓலைச்சுவடியொன்றைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்.
ஆனால் வந்தவர் சிவனார் அல்ல. அரசின் அல்லது சிங்கள பௌத்தத்தின் கையாள் என்பதை நாம் உணர வேண்டும். எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இவ்வாறானதொரு ஓலையுடன் எமது அரச திணைக்களம் ஒன்றுக்கு வந்திருப்பார்?
சில திணைக்களங்களை சிங்கள பௌத்த அரசானது தமது தேவைகளை முழுமையாகச் செய்யப் பாவித்து வருகின்றார்கள். நீரியல் திணைக்களம், கனியவளங்கள் திணைக்களம், வன இலாகா, தொல் பொருள் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் என பல திணைக்களங்களையும் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உள்ளடங்கிய அதிகாரசபைகளையும் இவ்வாறான ஓலைச்சுவடி போன்ற பல புனைகதைகளுடன் தான் அவற்றை வழிநடத்தி வருகின்றன என்று கொள்ள இடமிருக்கின்றது. எனவேதான் நாம் விழிப்பு ணர்வுடன் செயலாற்ற வேண்டுமென குறிப்பிடுகின்றேன்.
இன்றைய சூழலில் தமிழர்களுக்கென்று ஒரு தனியான தொடர்புடைய பிரதேசம் இருக்கக்கூடாது என்பதில் அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதுபோன்ற கெடுபிடிகள் தான் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வேறு எந்த வழிமுறைகளும் காணப்படாத நிலையில் ‘சாம பேத தான தண்டம்’ என்ற நான்கிலும் இறுதி வழிமுறைக்கு இளைஞர்களைத் தூண்டியது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக எண்ணி அரசு மார்தட்டிக் கொள்ளலாம். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களின் உணர்வுகள் மௌனிக்கப்படவில்லை என்ற விடயத்தை அரசும், பெரும்பான்மை ஆதிக்கவியலாளர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது ஒரு சக்தி அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கின்றபோது அதனை வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவைத் தேடி அரசு முழந்தாளிட்டு நிற்கின்ற ஒரு நிலை விரைவில் ஏற்படலாம். அப்பொழுதும் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை வழங்கத் தயாராக இருப்பார்களோ நான் அறியேன். எனவேதான் மக்கள் சக்தியாகிய அந்த மாபெரும் சக்தியை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மேலோங்கச் செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தபட வேண்டும் என்றார்.