பொலிஸ் மா அதிபரிடம் இருந்து வடக்கு இளைஞர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் பொலிஸார் சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக சந்தேகத்திற்கு இடமாக பயணித்த வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன.
அத்தோடு வீதிகள், சந்திகளில் ஒன்றுகூடி நின்ற இளைஞர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் அளவுக்கு அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துமாறும், அதன் சூத்திர தாரிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்புரை பிறப்பித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் ஒரு தொகுதி பொலிஸார் இந்த விசேட நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விசேட நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும், வீதிகளில் முக்கிய இடங்களில் இளைஞர்கள் அநாவசியமான முறையில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்ட குறித்த பொலிஸ் உயரதிகாரி, தவறும் பட்சத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.