வட மாகாண ஆளுநர் செயலகம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முற்றுகை!
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியான போராட்டங்களினை முன்னெடுத்துவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த போராட்டத்தினை பல்வேறு பரிணாமங்களில் மேற்கொண்டுவந்த மாணவர்கள் உண்ணாவிரதம், கதவடைப்பு மற்றும் வகுப்பு புறக்கணிப்பு போன்றவற்றினோடு அண்மையில் இதுகுறித்த தீர்வு ஒன்றிற்காக சனாதிபதியையும் சந்தித்திருந்தனர்.
எனினும் மாணவர்களின் போராட்டத்திற்கான சாதகமான நிலைகள் உரிய தரப்புக்களிடமிருந்து கிடைக்காத நிலையில் தமது போராட்ட வடிவத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் ஐ.நா செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.