“நான் கொக்கல்ல“ – விக்னேஸ்வரனுக்கு துரைராசசிங்கம் பதிலடி!
தமிழரசுக்கட்சியின் செயலாளருக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான கருத்துமோதல் தொடர்கின்ற நிலையில் விக்னேஸ்வரன் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகிறார் என்று தமிழரசுக்கட்சியின் செயலர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொரட்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சாடி வடக்கு முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு, தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலர் கி.துரைராசசிங்கம், முதல்வர் கட்சித் தலைமை கிடைக்கவில்லை என்பதால் தமிழ் அரசுக் கட்சிக்கு மாறாகச் செயற்படுகின்றார் என்று பதிலிறுத்திருந்தார். இதற்கு வடக்கு முதலமைச்சர், தான் அவ்வாறில்லை என்ற சாரப்பட பதிலளித்திருந்தார்.
இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலர் கி.துரைராசசிங்கம் பதில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது- விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல என்றாலும், ஐவரில் ஒருவன். இல்லையென்றால் ஏகலைவன். அவருக்கு அளிக்க வேண்டிய கண்ணியத்தை வழங்கி ‘உள்ளதையும் நல்லதையும்’ சொன்னேன். ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்’ என்று நொந்தேன்.
அவர் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார். ‘எய்தற்கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல்’ என்ற வள்ளுவம் போல், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தவறவிடாது தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றேன்.
‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ’ என்று ஏங்குவதை விட என்ன செய்ய? நாம் முடியுடை வேந்தர் பரம்பரை. ‘வடவேங்கடம் முதல், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகை’ எப்படியோ சுருக்கி இன்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுகின்றோம்.
‘கற்தூணாய் நொருங்குவோமன்றி, காலமறிந்து செயற்படோம்’ என்றிருப்பது தமிழர் தம் தலைவிதியாக மாறிவிடக் கூடாது என்பது என் எண்ணம்.
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கிறது புறநாநூறு. துரோணாச்சாரியார் விஸ்வாமித்திரராக விஸ்வரூபம் எடுக்கின்றார். நான் கொக்கு அல்ல. எனினும் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் உள்ளபடியே இருக்கும்.
இனிமேல் இது பற்றி நான் தொட மாட்டேன். தொடங்கியவரே முடிப்பவரும் ஆவார் என்ற மரபுப்படி ஐயா முடித்து வைப்பதாயினும் சரி. அது அவர் திருவுளம் – என்றார்.