SuperTopAds

பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுதலை

ஆசிரியர் - Admin
பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுதலை

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

பிரபல பாடகர் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவரும் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

இருவரும் ப்லய் டுபாய் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எப்.இசட். 547 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 07 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். 

கடந்த பெப்ரவரி மாதம் மாக்கந்துர மதூஷுடன் சேர்த்து டுபாயில் கைது செய்யப்பட்ட நதீமால் பெரேரா சுமார் 50 நாட்களின் பின்னர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.