போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசை பிணையெடுக்கிறது கூட்டமைப்பு! - அனந்தி குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசை பிணையெடுக்கிறது கூட்டமைப்பு! - அனந்தி குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணையில் எடுக்கின்ற வேலையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர், அனந்தி சசிதரன், குற்றம்சாட்டியுள்ளார். சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது, ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கடும் அதிருப்திக்குள் உள்ளாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் கவனத்திற் கொள்ளாமல் தங்களுடைய நாடுகளின் நலன்களின் அடிப்படையிலையே இந்தத் தீர்மானமும் கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுவது போன்றதாகவே பார்க்கப்படுகிறது. ஆகையால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைக் கோரி நிற்கின்ற போதும் அந்த நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

ஆனாலும் தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்த இலங்கை அரசாங்கத்தை விடுவித்து அவர்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

அது மாத்திரமல்லாமல், சர்வதேசத்தின் பிடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலைகளையே கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். இதனை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆகையால், தான் தமக்கான நீதியைக் கோரி பல வழிகளிலும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கடிதத்தில் என்ன விடயம் குறிப்பிடப்பட்டிருக்கின்றதென்பதை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் பல தடவைகள் கோரியிருந்த போதும், அது என்னவென்று இதுவரையில் வெளிப்படுத்தப்படாத நிலையே உள்ளது. அது ஒரு புரியாத புதிராகவே இருப்பதால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று கோருவதாகவும், அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு