டெனீஸ்வரனின் மனுவுக்கு எதிரான விக்னேஸ்வரனின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு!

ஆசிரியர் - Admin
டெனீஸ்வரனின் மனுவுக்கு எதிரான விக்னேஸ்வரனின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு!

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்துள்ள, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஆட்சேபனை மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அறிவித்தனர்.

தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். அதன்படி டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி, டெனிஸ்வரன் மீண்டும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் கடந்த விசாரணையின்போது ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு