கட்டண கணிப்பான் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு இறுதி எச்சாிக்கை..
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கட்டண கணிப்பான் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் 2019.02.01ம் திகதி தொடக்கம் பயணிகள் சேவையில் ஈடுபட முடியாது. என யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனோல்ட் கூறியுள்ளாா்.
மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என அறியத்தரப்பட்டிருந்தது.
இருப்பினும் இந் நடைமுறை முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ்
பதிவுகளைக் கொண்டுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளில் கணிப்பு பொறி பொருத்துவ தற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உரிமையாளர்களை அறிவுறுத்துவதோடு,
மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலீஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில்
மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள் என மாவட்டச் செயலக கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 2019.02.01 இலிருந்து யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளும் கண்டிப்பாக இடத்தூர கணிப்பு பொறிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
என்பதோடு, அவ்வாறு பொறிகளை பொருத்தாத மாநகர எல்லைக்குற்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு,
தரிப்பிடம் மீளப்பெறப்படும்” என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தீர்மானத்தை கருத்திற்கொண்டு உரிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு
முச்சக்கர வண்டி உரிமையாளர்களை இடத்தூர கணிப்பு பொறிகளை பொருத்த தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.