யாழ்.மல்லாகம் சந்தியில் நான்கு மதங்களையும் இழிவுபடுத்திய விஷமிகள்

ஆசிரியர் - Admin
யாழ்.மல்லாகம் சந்தியில் நான்கு மதங்களையும் இழிவுபடுத்திய விஷமிகள்

யாழ்.மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள வைரவர் ஆலயத்திற்கு முன்பாக கே. கே. எஸ்.பிரதான வீதியில் நான்கு மதங்களையும் இழிவுபடுத்தும் விஷமிகள் சிலர் புத்தாண்டு வாழ்த்துப் பொறித்துள்ளனர்.

மேற்படி வீதியின் நடுவில் சைவசமயத்தின் மத சின்னமான சூலம், கிறிஸ்தவ மதத்தின் சின்னமான சிலுவை, பெளத்த மதத்தின் சின்னமான தர்மசக்கரம், இஸ்லாம் மதத்தின் சின்னமான பிறை ஆகிய சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. குறித்த மத சின்னங்களுக்கு மேலாக HAPPY NEW YEAR- 01-01-2019 என பொறிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற வர்ணத்தைப் பயன்படுத்தி மேற்படி மத சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. குறித்த வீதி பிரதான வீதியாகக் காணப்படும் நிலையில் இந்த வீதியால் தினம் தோறும் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன.மத சின்னங்களுக்கு மேலாக வாகனங்கள் பெரும்பாலும் செல்லுகின்றன. இதுதொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி புத்தாண்டு வாழ்த்தைப் பொறித்தது யார்? என்பது இதுவரை தெரியவராத நிலையில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் குறித்த செயற்பாடு அமைந்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு