வசமாக மாட்டிய சைக்கிள் திருடன்..
பருத்தித்துறை நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த இளைஞர் ஒருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதி சோதனை நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டு இருந்த
வேளை இளைஞர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் இன்னொரு துவிச்சக்கர வண்டியை இழுத்துக்கொண்டு வந்துள்ளார்.
அதன் போது குறித்த இளைஞரை பொலிசார் சந்தேகத்தில் மறித்த போது இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் வீதியில் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடியவரை பொலிசார் துரத்தி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த துவிச்சக்கர வண்டியை களவாடி வந்தமை தெரியவந்துள்ளது.
அதையடுத்து பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது , தான் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் ,
துவிச்சக்கர வண்டிகளை திருடி விற்று வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளார் அத்துடன் , விசாரணைகளின் போது கூறிய தகவல்களை கொண்டு பொலிசார் 09 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளனர்.
குறித்த நபரை பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில், முற்படுத்திய போது எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட 09 துவிச்சக்கர வண்டியில் 02 துவிச்சக்கர வண்டிகளே அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் , ஏனையவை அடையாளம் காணப்படவில்லை
எனவும் , தெரிவித்த பொலிசார் துவிச்சக்கர வண்டிகள் களவு போனவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை அடையாளம் காட்டுமாறு கோரியுள்ளனர்.