இன்னமும் இராணுவ வசம் உள்ள பெரும் தொகையான கால்நடைகள்

கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்குள் தங்களுடைய பெரும் தொகையான கால்நடைகள் இன்னமும் இராணுவ வசம் உள்ளதாக இதுவரை மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு நேற்று ஊர்யிதம் செய்யப்பட்டுள்ளது.
தமது கால்நடைகளை கண்டு உறுதிப்படுத்திக் கொண்ட மக்கள் அவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிய போதும் அதனை வழங்க இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 133.34 ஏக்கர் காணிகள் நேற்று மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இக் காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்பிலவு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது. இதற்காக விடுவிப்புக்கு இனங்காணப்பட்ட காணிகளில் உரிமையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதன் போது நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஒரு தொகுதி மாடுகள் நின்றதை மக்கள் அவதானித்துள்ளனர். அம் மாடுகளின் நிறங்கள், குறி அகியவற்றைக் கொண்டு தமது மாடுகள்தான் என்பதை மக்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
காணிகள் விடுவிக்கப்படும் போது தமது கால்நடைகளையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு மக்கள் அங்கு நின்ற இராணுவத்தினரிடம் கோரியிருந்தனர். இருப்பினும் அதற்கு மறுப்புத் தெரிவித்த இராணுவத்தினர், அது தொடர்பில் மேலதிகாரிகளுடன் பேசுமாறு கோரி மக்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.
செய்தியாளர் : க.ஹம்சனன்