தேர்தல் ஆணைக்குழுவுடன் இரகசியமாகப் பேச்சு நடாத்தியுள்ள ஐனாதிபதி..
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்ற போதும் அது பற்றிய உத்தியோகபூர்வ விவரங்கள் எவையும் வெளியிடப்படாமல் இரகசியம் பேணப்படுகின்றது.
உரிய காலப் பகுதி முடிவடைவதற்கு முன்பாகப் பொதுத் தேர்தலுடன் சேர்த்து அரச தலைவருக்கான தேர்தலையும் நடத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது என்று நம்பகமான வட்டாரங்கள் மூலம் அறிய கிடைக்கிறது.
நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு தேர்தல் மூலமே தீர்வு காண முடியும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக நம்புகின்றார்.
நாடாளுமன்றத் தேர்தலை தனியே நடத்துவதற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்படுவதாலும், பல தரப்புகளும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாலும்,
நாடாளுமன்றத் தேர்தலையும், அரச தலைவர் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர் ஆராயத் தொடங்கியிருக்கிறார்..
கடந்த மாதம் 26ஆம் திகதி தலைமை அமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேன தலைமை அமைச்சராக நியமித்தார்.
இது அரசமைப்புக்கு முரணானது என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, பதவி நீக்கத்தை ஏற்க மறுத்தார். தானே தலைமை அமைச்சர் என்றார்.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் மகிந்த ராஜபக்ச தடுமாறி வருகின்றார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த அரச தலைவர் மைத்திரிபால எடுத்த முயற்சியும் பிசுபிசுத்துள்ளது.
அரச தலைவரின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், அதற்கு இடைக்காலக் கட்டளையும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து செல்கின்றது. பொருளாதார ரீதியிலும் அழுத்தம் அதிகரித்து வருகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி, அரச தலைவர் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன தயாரா என்று கடந்த வியாழக் கிழமை கொழும்பில் நடத்திய மாபெரும் போராட்டத்தில் சவால் விடுத்திருந்தது.
இந்த நிலையில் அரச தலைவர் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆராயத் தொடங்கியுள்ளார்.
இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் வைப்பதற்கு எந்தச் சட்டத் தடையும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவினர் அரச தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் நம்பகமாக அறியக் கிடைக்கிறது.
இரண்டு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அதிகளவான ஆளணி தேவைப்படும் என்பதும் அரச தலைவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு மாத்திரமே தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
அரச தலைவர் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த இணங்கினால், நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான மூன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மை நாடாளுமன்றத்தி கிடைக்கலாம் என்றும் அரச தலைவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.