வாள்வெட்டு சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொலிஸாருக்கு ஆப்பு..
கோண்டாவில் பகுதியில் உள்ள வீட்டில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றவேளையில் அந்த வீட்டின் முன்னாள் வீதிச் சோதனையில் பல பொலிசார் நின்றபோதும் அதனைத் தடுக்க தவறிய பொலிசாருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கலந்துரையாடலின்போதே மேற்படி கருத்தை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதயில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி மாலையில் வீடொன்றுக்குள் வாளுடன் புகுந்த இளைஞன் அந்த வீட்டில் ரகலை செய்து வீட்டு உரிமையாளரையும் வாளால் வெட்டியுள்ளான்.
இவ்வாறு குறித்த இளைஞன் சுமார் அரை மணிநேரம் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று வீதியில் நின்ற பொலிசாரிடம் விடயத்தை கூறியபோது இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குங்கள் எனக் கூறிய வீதிச் சோதனைப் பொலிசார் வேடிக்கை பார்த்தவாறு நின்றனர்.
இதனால் சர்வசாதாரனமாக வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டவர் வீதி வழியாக தப்பிச் சென்றார். அங்கே கடமையில் இருந்த பொலிசார் நினைத்திருப்பின் சான்றுப்பொருளுடன் அந்த வாள் வெட்டு இடம்பெற முன்பே அந்த நபரை கைது செய்திருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு இடம்மெறவில்லை. இதன் பின்பு கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க அரைமணித்தியாலம் தாண்டிய நிலையில் பொலிசார் வீட்டிற்கு வந்த நேரம் வாள் வெட்டை நடாத்தியவர் அங்கிருந்து தப்பித்து விட்டார்.
இந்த நிலையில் மறுநாள் பகல்வேளையில் ஊர் மக்கள் சிலர் இணைந்து அந்த வாள் வெட்டினை நடாத்தியவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும்போதே யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.