கொள்ளையடித்த நகைகளில் தாலி கொடியை மட்டும் திருப்பி கொடுத்த கொள்ளையர்கள்..
கொட்டடி சூரிபுரத்தில் கடந்த 9ம் திகதி அதிகாலையில் வீடு பிரித்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவரை கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தி அச்சுறுத்திய விட்டு கொள்ளையடித்த 18 தங்கப் பவுண் நகையில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டிற்குள் 9ம் திகதி அதிகாலை 2 மணியளவில் வீட்டின் புகை கூட்டைப் பிரித்து உள் நுளைந்த மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டின் அறைகளை சல்லடையிட்டுத் தேடியுள்ளனர் .
இறுதியிலேயே வீட்டார் படுத்துறங்கிய சாமி அறைக்குள் பிரவேசித்துள்ளனர். அவ்வாறு பிரவேசித்த கொள்ளையர்கள் சாமியறையில் தேடுதல் நடாத்திய சமயம் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டார் .
அவ்வாறு விழித்தவர் நிலமையை ஊகித்து குரல் எழுப்பியுள்ளார். கணவரின் குரலைக் கேட்டு மணைவியும் விழித்தெழுந்த நிலையில் கத்தி முனையில் கணவரை அச்சுறுத்தியவாறு மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை கழட்டுமாறு கோரியுள்ளனர்.
மீண்டும் கணவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் கணவரின் காலில் இருந்து இரத்தம் பெருகிய நிலையிலும் கணவர் கொள்ளையனின் கையில் இருந்த கத்தியை மடக்கிப் பறித்துள்ளார்.
இதனால் வீட்டில் இருந்த பொருட்களால் வீட்டு உரிமையாளரை தாக்கியவாறு மனைவியின் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலிக் கொடியினை அறுத்து எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில் கையில் அகப்பட்ட 18 பவுன் நகைகளுடன் மூன்று கொள்ளையர்களும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கைப்பற்றப்பட்ட கத்தி மற்றும் திருடர்கள் திறந்த கதவில் இருந்த கை அடையாளம் என்பவற்றினை சேகரித்து அதன் மூலம் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கத்தி அடையாளங்கள் தொடர்பில் ஊரில் கதைகள் வெளியில் தெரிந்த நிலையில் களவாடப்பட்ட தாலிக்கொடியில் இருந்த காசுகள் அகற்றப்பட்ட நிலையில் 7 பவுனுக்கும் அதிக நிறைகொண்ட தாலியை கொள்ளையர்கள் குறித்த வீட்டில் கொண்டுவந்து போட்டுள்ளனர்.