யாழ்.குடாநாட்டில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு, பொலிஸார் அசமந்தம்..
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த இரு நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளபோதிலும் பொலிசார் அக்கறையின்றிச் செயல்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் 8ம் திகதி இரவு திருநெல்வேலிப் பகுதியில் சில திருடர்களின் நடமாட்டத்தை இனம்கண்ட இளைஞர்கள் இரவு 10 மணியளவில் பொலிசாருக்கு தகவல் வழங்கியபோதும் விடியும் வரையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. என குற்றம் சாட்டப்படுகின்றது.
இதன்போது திருடர்கள் பின் வழியாக தப்பிச் சென்று அருகில் உள்ள ஓர் வீட்டிற்குள் யன்னலைப் பிரிந்து உட்சென்று சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்ந கைத் தொலைபேசி ஒன்று , சிறுதொகைப் பணம் என்பவற்றுடன் வங்கி அட்டைகளையும் களவாடினர்.
இதேபோன்று அருகில் ஓர் வீட்டின் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்களின் இரு பற்றரிகளும் அருகில் இருந்த ஓர் விறகு விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த கயஸ் வாகனத்திற்குள் இருந்த விலை உயர்ந்த கைத் தொலைபேசியினையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதேநேரம் 9 ம் திகதி அதிகாலையில் கொட்டடி சூரிபுரத்தில் வீடு ஒன்றின் பிரித்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவரை கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தி அச்சுறுத்திய நிலையில் 18 தங்கப் பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டிற்குள் அதிகாலை 2 மணியளவில் வீட்டின் புகை கூட்டைப் பிரித்து உள் நுளைந்த மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டின் அறைகளை சல்லடையிட்டுத் தேடியுள்ளனர் . இறுதியிலேயே வீட்டார் படுத்துறங்கிய சாமி அறைக்குள் பிரவேசித்துள்ளனர். அவ்வாறு பிரவேசித்த கொள்ளையர்கள் சாமியறையில் தேடுதல் நடாத்திய சமயம் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டார் . அவ்வாறு விழித்தவர் நிலமையை ஊகித்து குரல் எழுப்பியுள்ளார்.
கணவரின் குரலைக் கேட்டு மனைவியும் விழித்தெழுந்த நிலையில் கத்தி முனையில் கணவரை அச்சுறுத்தியவாறு மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை கழட்டுமாறு கோரியுள்ளனர். மீண்டும் கணவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் கணவரின் காலில் இருந்து இரத்தம் பெருகிய நிலையிலும் கணவர் கொள்ளையனின் கையில் இருந்த கத்தியை மடக்கிப் பறித்துள்ளார்.
இதனால் வீட்டில் இருந்த பொருட்களால் வீட்டு உரிமையாளரை தாக்கியவாறு மணைவியின் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலிக் கொடியினை அறுத்து எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில் கையில் அகப்பட்ட 18 பவுண் நகைகளுடன் மூன்று கொள்ளையர்களும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர். இதேநேரம் வீட்டின் உள்ளே மூன்று பேர் மட்டுமே உள்நுழைந்தபோதும் வெளியில் யாரேனும் நின்றனரா என்பது தெரியாது எனவும் வீட்டிற்குள் நுழைந்தவர்களும் முகங்களை மூடிக் கட்டியிருந்தமையினால் இனம் கானமுடியவில்லை. என வீட்டின் உரிமையளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்த கணவரை 3 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் காலை 7 மணிக்கு பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் 9 மணியை தாண்டிய பின்னரே பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததக வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று நேற்று அதிகாலையில் வதிரிப் பகுதியில் இறந்தவரின் உடலில் இருந்த தங்க ஆபரணங்களை வீடு புகுந்த திருடர்கள் நேற்றுக்காலை 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் மூன்று தினங்களிற்கு முன்னர் காலம் சென்ற பெண்மணியின் உடல் வீட்டிலே வைக்கப்பட்டிருந்தது. மரண வீட்டின் வேலைப் பழுகாரணமாகவும். உறவுகள் அதிகமாக காணப்பட்ட நிலையில் அனைவரும் மரண நிகழ்வில் மூழ்கியிருந்துள்ளனர். இந்த நேரம் கூட்டத்தோடு கூட்டமாக திருடனும் வீட்டுக்குள் உள் நுழைந்துள்ளான்.
இவ்வாறு உள் நுழைந்த திருடன் வீட்டில் பெட்டியில் இருந்த இறந்த பெண்மணியின் கழுத்தில் இருந்த சங்கிலி , காப்பு , தோடு உள்ளிட்ட தங்க ஆபரணங்களை களவாடிச் சென்றுள்ளான். இதனை அறியாத விட்டார். காலையில் இறந்த பெண்மணியின் உடலை உற்று நோக்கியபோதே தங்க நகைகள் களவாடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .
களவு , கொள்ளைகளிற்கு அப்பால் இறந்த உடலில் இருந்தும் களவாடும் ஈனப் பிறவிகளின் செயல் என குறித்த சம்பவம் தொடர்பில் அப் பபுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.